ETV Bharat / city

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு - புள்ளி விவரங்களால் வெளியான அதிர்ச்சித் தகவல்

author img

By

Published : Jul 9, 2021, 7:14 AM IST

நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பின்னர், மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கையின்போது கிராமப்புறத்தில் படித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைத்து மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். மேலும் கிராமங்களில் இருந்தாலும், நகரங்களில் தங்கி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது வாடிக்கை.

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டபோது, கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரையில் படித்து, மீண்டும் நீட் தேர்வுக்கும் படிக்க வைக்க வேண்டிய நிலைக்கு கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் வசதியானவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை மருத்துவத்திற்கு படிக்க வைக்கின்றனர்.

நீட் தேர்வின் தாக்கம்

இந்தியாவில் நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்தத் தேர்வினால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களும் லட்சக்கணக்கில் செலவழித்து, தனியாக பயிற்சி பெற்றே நீட் தேர்வில் தகுதி பெறுகின்றனர்.

எம்பிபிஎஸ் படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன்பும், நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் விழுக்காடு விவரம் குறித்த புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன .

நீட் தேர்வுக்கு முன்

2015-16ஆம் கல்வியாண்டில், நகர்ப்புற மாணவர்கள் 37.20 விழுக்காடும், கிராமப்புற மாணவர்கள் 62.80 விழுக்காடும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

2016-17ஆம் கல்வியாண்டில் நகர்ப்புறங்களில் இருந்து படித்த மாணவர்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 34.83 விழுக்காடு பேரும், கிராமங்களில் இருந்து படித்த 65.17 விழுக்காடு பேரும் சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வுக்குப் பின்

நீட் தேர்வு வந்த பின்னர், 2017-18ஆம் கல்வியாண்டில், நகர்ப்புறங்களில் இருந்து 44.55 விழுக்காடும், கிராமப்புறத்தில் இருந்து 55.45 விழுக்காடு மாணவர்களும், 2018-19ஆம் கல்வியாண்டில், நகரங்களில் இருந்த மாணவர்கள் 51.98 விழுக்காடு மாணவர்களும், கிராமங்களில் இருந்து 48.02 விழுக்காடு மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

2016-17ஆம் கல்வியாண்டில் 65.17 விழுக்காடு என்ற நிலையில் இருந்த கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கையானது, 2018- 19ஆம் ஆண்டில் 48.02 விழுக்காடு அளவிற்கு சரிந்து இருப்பது தெரியவந்துள்ளன.

இதற்கு அடுத்த கல்வியாண்டிலும் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை கடுமையாகச் சரிந்து இருப்பதாக மருத்துவக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நீட் பாதிப்பு ஆய்வுக் குழு - வரம்பை மீறிய செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.